வெளிநாட்டவர் ஒருவர் மலேசிய குடிநுழைவுச் சின்னம் பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான், இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காணொளியில் இடம் பெற்ற வாகனம் துறையின் அதிகாரப்பூர்வ வாகனம் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அனுமதியின்றி குடிநுழைவுத் துறையின் சின்னத்தைப் பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபரிடம் சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் துறையின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதை குடிநுழைவுத் துறை ஒரு போதும் அனுமதிக்காது என்றும் ஸாகாரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.








