பேராக் மாநிலம் சுங்கை, கோலா பிகாம் பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, அங்கு வசித்து வந்த 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது, இனப் பாகுபாடு இன்றி சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதைக் காட்டுவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
நேற்று 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, சுங்கை ஜசெக மாநிலத் தொகுதிப் பிரிவு ஏற்பாடு செய்த இரவு விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஙா கோர் மிங், குடியிருப்பாளர்களுக்கு நிலப் பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுங்கை சட்டமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவருமான அ. சிவநேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஙா கோர் மிங் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்திய சமூகத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் பல்வேறு திட்டங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே இம்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய சமூகக் குடியிருப்புகளுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டும், தமிழ் வழிப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கான நிதி 150 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள், அரசாங்கத்தின் உண்மையான செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் செயல்பாட்டை மதிப்பிட வேண்டும் என்றும், இன உணர்வுகளைத் தூண்டும் அரசியல் கருத்துகளால் திசை திருப்பப்படக்கூடாது என்றும் ஙா கோர் மிங் கேட்டுக் கொண்டார்.








