சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐடிஇ, மலேசியாவின் மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் அதிநவீன தொழில்நுட்ப பயிற்சி மையமான அட்டேக் ஜெடிஎம்முடன் தொழில்நுட்பக் கல்வி ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், சிங்கப்பூர் ஐடிஇக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது இந்த முன்மொழிவை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் துறையில் அனைத்துலக அளவிலான வியூக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் மனிதவள அமைச்சின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிங்கப்பூர் ஐடியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கோ மோங் சோங் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த போது, தொழில்நுட்ப மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டம் குறித்து ரமணன் முன்மொழிந்தார். இதற்கு ஐடிஇ தரப்பில் நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இரு தரப்பினரும் அடுத்தகட்டமாக ஒத்துழைப்பின் வடிவத்தை விரிவாக ஆராய உள்ளதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சந்திப்பில் ஐடிஇ கல்லூரியின் வணிகம் மற்றும் சேவைப் பள்ளி இயக்குநர் டான் வீ கியாங், அனைத்துலக அலுவலக உதவி இயக்குநர் ஜென் டான் மற்றும் அனைத்துலக அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி கேரல் லிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாணவர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக, அதன் செயல்முறை, ஒத்துழைப்பின் வரம்பு மற்றும் பிற விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மனிதவள அமைச்சு அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.








