கோத்தா கினபாலு, செப்டம்பர்.25-
உள்ளூர் பொது பல்கலைக்கழங்களிலும், இதர உயர்க் கல்விக்கூடங்களிலும் நாட்டின் சந்தைத் தேவைகள் மற்றும் அரசாங்கத் திட்டமிடலுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுவதை உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மறுத்தார்.
உயர்க்கல்வி அமைச்சு மற்றும் அது தொடர்புடைய தரப்பினரான குறிப்பாக MQA எனப்படும் மலேசிய தகுதிச் சான்றிதழ் கழகம், உயர்க்கல்விக்கழகங்களில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள் சந்தை நிலைமைக்கு ஏற்ப இன்னமும் பொருத்தமானவையா? என்பதை உறுதிச் செய்வதற்காக ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பயிற்சித் திட்டங்கள் குறித்து மறுமதிப்பீடுகளை நடத்துகிறது என்று டாக்டர் ஸம்ரி குறிப்பிட்டார்.
இதன் பொருள், நடப்பு பயிற்சித் திட்டங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது நமது மாணவர்களுக்கு ஏலத்தில் விலை போகாத பயிற்சித் திட்டங்கள் என்று கூறப்படுவதை அமைச்சர் டாக்டர் ஸம்ரி வன்மையாக மறுத்தார்.
இன்று சபா, கோத்தா கினபாலுவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தலைமைத்துவத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துதல் எனும் அனைத்துலக மாநாட்டை நிறைவு செய்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர் ஸம்ரி இதனைத் தெரிவித்தார்.








