கோலாலம்பூர், பிப்ரவரி.18-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தானியங்கி வாகன எண் பலகை அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக, சுமார் 2 லட்சம் பயனர்கள் புதிய JustGO Malaysia செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் முதல் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ஹூத்தான் கம்போங் முதல் சுங்கை டூவா வரையிலான ஒன்பது டோல் சாவடிகளில் இந்தச் செயலி முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தச் செயலி மூலம் "பாதை சுதந்திரம்" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்டண முறையையும் பின்பற்ற வேண்டிய அவசியமின்றி, டோல் சாவடியின் எந்தப் பாதை வழியாகவும் நுழையலாம் அல்லது வெளியேறலாம்.
வாகனங்கள் டோல் சாவடி பாதைகளைக் கடக்கும் போது, அவற்றின் பதிவு எண் பலகைகள் தானாகவே கண்டறியப்படும். அதற்கான கட்டணம் செயலியில் இணைக்கப்பட்டுள்ள பயனரின் விருப்பமான வங்கி அட்டை அல்லது கட்டண முறையிலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும்.
பயனர்கள் எந்தவித கூடுதல் சாதனங்களையும் பொருத்த வேண்டிய அவசியமில்லை. JustGO செயலியைப் பதிவிறக்கம் செய்து வாகனத்தை முறைப்படி பதிவு செய்தால் போதுமானது. இதற்கு முன்பணக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.








