புக்கிட் மெர்தாஜாமில் மூன்று குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாய் ஒருவர், விபத்தில் கடுமையாக காயமடைந்த நிலையில், அவரின் 2 வயது குழந்தை உயிரிழந்தது.
இச்சம்பவம் நேற்று காலை சுமார் 7.45 மணியளவில் ஜாலான் சோங் பான் கெங் என்ற இடத்தில் நடந்தது.
அப்பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி சாலையோர கல் தடுப்பில் மோதியதாக மத்திய செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்விபத்தில், 7 வயது குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 வயது குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த நேரத்தில், அந்த தாய் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
காயமடைந்தவர்கள் புக்கிட் மெர்டாஜாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.








