இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், வழக்கமான அரசியலைப் புரிவதாக, தேசிய பேராசிரியர் மன்றத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஹாசன் தெரிவித்தார்.
ஆளும் அரசாங்கத்தின் திட்டங்கள் நல்லதொரு திட்டமாக இருந்தாலும், அந்த திட்டத்தை தாங்களே முன்பு பரிந்திரைத்திருந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அதன் அமலாக்கத்தை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியினரின் வேலை.
நாட்டின் மீட்சிநிலை மன்றம் - எம்.பி.என் -னின் தலைவராக இருந்த காலத்தில், முகைதீன் இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை, அப்போதைய அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தார்.
அதன் வழி, அரசாங்கம் ஆண்டுக்கு 20 பில்லியன் வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், டீசல் வாயிலாக உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான பெருமிதத்தைத் தாம் பெற முடியாது என்பதற்காக, முகைதீன் மக்களின் வாழ்க்கை செலவின அதிகரிப்பைக் காரணம் காட்டி, அதனை எதிர்ப்பதாக அஸ்மி கூறினார்.








