நோன்புப்பெருநாளுக்கு முன்னதாக பினாங்கு முஸ்லிம் லீக் ஏற்பாட்டில், ஜார்ஜ்டவுன் லிட்டில் இந்தியா பகுதியில் 23-வது ஆண்டாக நடைபெற்ற மாபெரும் ரமலான் பசார், வெகுவிமரிசையாகத் திறக்கப்பட்டது. இந்நிகழ்வை பினாங்கு தீவு மாநகர் மன்ற மேயர் டத்தோ இஞ்சினியர் ஏ. இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
முஸ்லிம் லீக் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாஜி நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சாகுல் ஹமீது, செயலாளர் மாட் நூர் மற்றும் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டத்தோ சதுருத்தீன் டாக்டர் ரிஸ்வான் ஆகியோர் உரையாற்றினர். உஸ்தாத் அஸ்லான் ஷா அவர்களின் துஆ ஓதலுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது.
இந்த ரமலான் பசாரில் இந்தியப் பாரம்பரிய உணவுகளான பிரியாணி, நாசி கண்டார், முர்தபா, நாசி தால்சா மற்றும் சிற்றுண்டிகளான அப்பம், வடை, ஜிகர்தண்டா போன்றவை விற்பனை செய்யப்பட்டன. மேலும், இளநீர், ரோஸ் மில்க், கரும்புச் சாறு போன்ற குளிர் பானங்களும் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றன. அவாணி அவர்கள் இந்நிகழ்வின் அறிவிப்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
இந்நிகழ்வில் டத்தோ மேஜர் லத்தீப், டத்தோ சுலைமான், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், இளைஞரணி மற்றும் மகளிரணி பிரதிநிதிகள், சகோதரச் சங்கத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










