கோலாலம்பூர், மார்ச்.29-
மலேசியாவின் ஆறு மாநிலங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 78 நபர்களுக்கு, 2007-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை, பொதுச் சுத்திகரிப்புச் சட்டத்தின் கீழ் சமூக சேவை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் சிகரெட் துண்டுகள் அல்லது டிஷ்யூ தாள்களை வீசுவது போன்ற சிறிய தவறுகள் கூட, வடிகால் அடைப்புக்கும் திடீர் வெள்ளத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், இந்தத் தண்டனை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தவறு செய்தவர்கள் பொது இடங்கள், கடற்கரைகள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், "குப்பையை வீசிய கைகளே அதைச் சுத்தம் செய்ய வேண்டும்" என்பதே இதன் நோக்கம் என்றும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.








