கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுதீன்-இல் உள்ள 121 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கே.டி.எம்.பி தலைமையகக் கட்டிடத்திலிருந்து, அதனை இடம் மாற்றம் செய்யும் விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக மலாயா இரயில்வே ஊழியர் சங்கமான ஆர்.யு.எம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம், இந்த மாற்றுத்திட்டத்தை மறுத்திருந்த நிலையில், தற்போது அந்த கட்டிடத்தை சொந்தமாக வைத்திருக்கும் இரயில்வே சொத்துக்கள் கழகமான ஆர்.ஏ.சி, தலைமையகத்தை மாற்றும் திட்டம் குறித்து கே.டி.எம்.பி நிர்வாகத்துக்கு சமீபத்தில் தகவல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் விளக்கமளிக்கையில், கே.டி.எம்.பி-யை கட்டாயமாக இடமாற்றம் செய்யும் எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு, பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன்-இல் கட்டப்பட்ட மெனாரா ஆர்.ஏ.சி கட்டிடத்திற்கு, கே.டி.எம்.பி தலைமையகத்தை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது தொடர்ந்து அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களில் கவனம் பெற்று வருகின்றது.








