முன்னாள் பிரதமர்களுக்கு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ் தானாக வழங்கப்படுவதில்லை என தொடர்புத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, முன்னாள் பிரதமர்களுக்குத் தானாக அழைப்பு அனுப்பப்படாது என்றும், ஆனால் அவர்கள் விழாவில் பங்கேற்பதற்கு தடையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் முறையான விண்ணப்பம் செய்வதன் மூலம் பங்கேற்பை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகாதீரின் மகனான முக்ரிஸ் மகாதீர், தனது தந்தை புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டிருந்தார்.
தமக்கு அழைப்பு கிடைக்காத நிலையிலும் கூட அவர் விழாவில் கலந்துகொண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஆகஸ்ட் 28 முதல் 31-ஆம் தேதி வரை மகாதீர் வெளிநாட்டில் இருப்பார் என பிரதமர் அலுவலகம் தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததாக அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
அதற்கான வெளிநாட்டு ஓய்வு வசதி விண்ணப்பம் பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








