கிளாந்தான், கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை விடுதியில், 29 வயது மதிக்கத்தக்க பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், கிளந்தான் போலீசார் 10 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அம்மருத்துவரின் உறவினர்கள், சக பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கிளாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் மாமட் தெரிவித்துள்ளார்.
அவரது இறப்பிற்கான காரணம் குறித்து அறிய இவ்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் யூசோஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கிளந்தான் சுகாதாரத்துறை இயக்குநர் அஸ்மான் யாகோப் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அம்மருத்துவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எகிப்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று, கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த அம்மருத்துவர், கடந்த மார்ச் 6-ஆம் தேதி, தங்கும்விடுதியில் உள்ள குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








