கோலாலம்பூர், ஜனவரி.24-
பினாங்கு மற்றும் கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணிக்கு இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகத்தின் திறப்பு விழா உட்பட பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பிறை நகரில் உள்ள புதிய செபராங் ஜெயா மருத்துவமனைக் கட்டிடத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் அன்வார், அதனைத் தொடர்ந்து, மடானி கலாச்சார திருவிழா மற்றும் பெர்மாத்தாங் பாவோ பகுதியில் நடைபெறும் கெண்டூரி ரக்யாட் பெனாங் 2026 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
செபராங் பிறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடியிருப்பாளர்களுக்கான சுகாதார சேவைகளின் திறனை மேம்படுத்துவதையும், அதன் தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த புதிய மருத்துவமனையானது திறக்கப்படுகின்றது.
அதே வேளையில் இன்று மதியம், செபராங் ஜெயா மாநகராட்சி கோபுர வளாகத்தில் நடைபெறும் Seberang Perai Aspire மையம் மற்றும் Santuni Komuniti திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிலும் அன்வார் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இதனையடுத்து, அன்வார் திறந்து வைக்கவுள்ள குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகமானது பினாங்கு அரசாங்கத்தின் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகின்றது.
இந்த அருங்காட்சியகமானது, தீபகற்ப மலேசியாவின் வடக்கு பிராந்தியத்தின் தொல்லியல் சுற்றுலா வரைபடத்திற்குப் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








