துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியத் தூதரகங்கள், உதவி செய்யத் தவறிவிட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.
24 மணி நேரமும் அங்குள்ள மலேசியர்களுக்கு உதவி செய்து வரும் தூதரக அதிகாரிகள், அவசர உதவிகள் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
திடீரென வான்வெளி மூடல் மற்றும் விமான ரத்துகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள், எதிர்கொண்டு வரும் பதற்றம் மற்றும் துயரத்தை தங்களால் புரிந்து கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, வார இறுதி நாட்களில் கூட தூதரக அதிகாரிகள் இடைவிடாது பணியாற்றி வருவதாக விளக்கமளித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் 29 ஆயிரம் மலேசியர்களும், ஐக்கிய அரசு சிற்றரசில் மட்டும் ஏறக்குறைய 8 ஆயிரத்து 500 மலேசியர்களும் சிக்கியுள்ளதாகக் கணக்கிட்டுள்ளது.
அவர்களில் 5 ஆயிரத்து 900 மலேசியர்கள் மட்டுமே தங்களின் இருப்பு குறித்து முறையாக பதிவு செய்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








