ஹஜ்ஜுப் பெருநாள் குர்பான் சடங்கு நிகழ்ச்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து ஆவேசமாக ஓடிய மாட்டை துப்பாக்கியால் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பலியிடுவதற்காக கொண்டு வரப்பட்ட அந்த மாடு கட்டுப்பாட்டை இழந்து வெறித்தனமாக ஓடியதால், வேறு வழியின்றி துப்பாக்கியால் அதன் காலில் சுட்டதாகவும், பின்னர் வழக்கமான முறையில் பலியிடப்பட்டதாகவும் அபு பக்கர் ஹம்சா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், மிரண்டு ஓடிய அந்த மாடு, பொதுமக்கள் மீது பாய்ந்து அதனால் உயிர்சேதம் ஏற்பட்டிருந்தால், அதற்கு பொறுப்பு ஏற்பது யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவத்தின் காணொளியானது நேற்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அபு பக்கர்க்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாட்டை துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் குறித்து சமூக ஊடகவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, அபு பக்காரிடம் விசாரணையைத் தொடங்கவுள்ள போலீசார், அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் குண்டுகளை சோதனையிடுவார்கள் என கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யுஷாரிஃபுதீன் யூசோப் தெரிவித்துள்ளார்.








