இ-இன்வாய்ஸ் எனப்படுன் மின்னூட்டப் பரிவர்த்தனைகளில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அல்லது தவறவிடப்பட்ட தகவல்களை அபராதம் இன்றி திருத்திக்கொள்ளும் வகையில், வரும் 2027-ஆம் ஆண்டு, டிசம்பர் 31 வரை இ-இன்வாய்ஸ் தன்னார்வ வெளிப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய இ-இன்வாய்ஸ் நடைமுறை அமலுக்கு வந்த நாள் முதல் வரும் 2027-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கப்பட்ட அல்லது சமர்ப்பிக்கப்படாமல் விடுபட்ட இ-இன்வாய்ஸ் விவரங்களை, வரி செலுத்துவோர் அபராதம் இன்றி சரிபார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்து மீண்டும் புதுப்பிக்க இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு உள்நாட்டு வருவாய் வாரியமான எல்.எச்.டி.என். எந்தவித அபராதமும் நாடாளுமன்றத்தில் இன்று ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ சுவான் ஹாவ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களான எம்.எஸ்.எம்.இ. எதிர்கொள்ளும் சவால்களை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவை தொடர்ந்து செயல்படவும் நிலைத்திருக்கவும் தேவையான பல ஆதரவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், இ-இன்வாய்ஸ் நடைமுறையை முழுமையாகப் பின்பற்றும் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளையும் விரைவுபடுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இ-இன்வாய்ஸ் நடைமுறையை அமல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தகுதியான செலவுகளுக்கு, ஒரு ஆண்டுக்குள் முழுமையான மூலதன சலுகை கோர அனுமதி வழங்கப்படும் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.
அதேவேளையில், இந்தச் சலுகை, தகவல் தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுகள் மற்றும் இ-இன்வாய்ஸுக்காக பயன்படுத்தப்படும் கணினி மென்பொருட்களை உருவாக்குதல் அல்லது மேம்படுத்துதல் தொடர்பான செலவுகளுக்கும் பொருந்தும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








