கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையான எல்பிடி2 கட்டுமானத்திற்காக திரங்காணு மாநில அரசாங்கம் செலவிட்டதாகக் கூறப்படும் 1.43 பில்லியன் ரிங்கிட்டை கூட்டரசு அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.
நிதி அமைச்சருமான அன்வார், எல்பிடி2 கட்டுமானச் செலவை ஏற்க கூட்டரசு அரசாங்கமும், திரங்காணு மாநில அரசும்
இணைந்து டி.கே.கே.பி. எனப்படும் மத்திய அரசின் சிறப்பு நிதியைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டி.கே.கே.பி. அறக்கட்டளை நிதியின் விதிமுறைகளின்படி, அந்த நிதி சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள், மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுநல நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே, எல்பிடி2 கட்டுமானச் செலவாக 1.43 பில்லியன் ரிங்கிட்டை கூட்டரசு அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இடமேயில்லை என்று செத்தியூ நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹரிசுகிர்னைன் அப்துல் காதிர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, அன்வார் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.








