ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு இன்று ஜூலை 7 -ஆம் தேதி காலை 8 மணி முதல் 64 வாக்குச்சாவடிகளில் அமைதியாகத் தொடங்கியது.
காலை முதலே வானிலை சாதகமாக இருந்ததால், போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் சிரமமின்றி வாக்களித்தனர்.
மொத்தம் 24 ஆயிரத்து 751 பேர் முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 12 ஆயிரத்து 41 ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது துணைகளும், 12 ஆயிரத்து 710 போலீஸ் மற்றும் பொது நடவடிக்கைப் படையான ஜி.ஓ.எஃப். வீரர்கள் மற்றும் அவர்களது துணைகளும் அடங்குவர்.
வாக்குச்சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்தனர்.
மேலும், பல்வேறு மையங்களில் வாக்குப்பதிவு எந்தவித இடையூறும் இன்றி ஒழுங்காக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முன்கூட்டியே வாக்குப்பதிவு மையங்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளன.
பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தாலும், காலை நேர வாக்குப்பதிவு பாதிப்பின்றி நடைபெற்றது.
ஜோகூர் மாநிலம் முழுவதும் 2.73 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், 56 சட்டமன்றத் தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
பொதுவாக்குப்பதிவு வரும் ஜூலை 11 நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








