சிகாமட், ஜனவரி.04-
ஜொகூர், லாபிஸ், பெக்கான் தெனாங், ஜாலான் தெனாங் ஜெயாவில் நேற்று சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உடல் கருகி மாண்டார்.
இதில் லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்ட போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீப்பிடித்தது. இத்தீ விபத்தில் லாரியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் முழுமையாகத் தீப்பற்றி எரிந்தன.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தீயின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் லாரியின் அடியிலேயே உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், தீயை அணைத்து அந்த ஆடவரின் உடலை மீட்டனர்.








