கோப்பெங், நவ. 16-
நீர் நடவடிக்கைகளுக்கு பிரசித்திப்பெற்ற பயிற்சி முகாமான பேரா, கம்பார் ஆற்றில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்த மூவர், நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்நது அந்த சுற்றுலா மையத்தில் அனைத்து வகையான நீர் நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் கம்பார் ஆற்றில் நீர் நடவடிக்கைகளுக்காக முகாம்களை திறந்துள்ள Resort நடத்துநர்கள், நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கமபார் மாவட்ட அதிகாரி நஸ்ருல் பஸாமி முகமட் தெரிவித்தார்.
குழு பயிற்சி முறையை மேம்படுத்துவதற்காக பேரா, கோப்பெங் சுங்கை ஜஹாங்கில் முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வந்த ஒரு குழுவினரில் மூவர் நேற்று மாலையில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாலை 5.56 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஆற்றில் ஒரு குழுவாக வாட்டர் ராப்டிங் Rafting நீர் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, மூவர், நீரில் மூழ்கி மாண்டனர்.
இந்த மூவரும் பொதுப் பணி இலாகாவின் அதிகாரிகள் ஆவர். பினாங்கு, செபராங் பிறை தெங்கா, ஜேகேஆர் ஐ சேர்ந்த ஒரு பொறியியலாளரான 47 வயது சுஹாயிலி மாட் சாட், லங்காவி ஜேகேஆர் ஐ சேர்ந்த உதவி பொறியியலாளரான 37 வயது கையிருல் ஹக்கிம் ஹமிட், லங்காவி JKR ஐ சேர்ந்த வாடிக்கையாளர் பிரிவு அதிகாரியான 29 வயது I இக்ராம் அப்துல் பாரி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டனர் என்று அடையாளம் கூறப்பட்டள்ளது.








