கோலாலம்பூர், நவ. 22-
பகடிவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சமூக ஊடக பிரபலம் இஷா ராஜேஸ்வரியின் மரணத்திற்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் அதே நபர், மற்றொரு பெண்ணை பகடிவதை செய்ததன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரை பகடிவதை செய்ததன் காரணமாக இஷா ராஜேஸ்வரி மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அதே நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாங்கள் கைது செய்து இருப்பதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அயிடில் போல்ஹசான் தெரிவித்தார்.
எனினும் விசாரணைக்குப் பின்னர் அந்த சந்தேகப்பேர்வழி போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
பகடிவதையினால் கடந்த ஜுலை 5 ஆம் தேதி கோலாலம்பூர், ஸ்தாபாக், கோம்பாக் செத்தியாவில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இஷா ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் ஒரு ஆணும், பெண்ணும் இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டனர்.
ரவாங், புக்கிட் பெருந்தோங்கைச் சேர்ந்த 36 வயது ஷாலினி பெரியசாமி, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
Alphaquinnsha என்ற பெயரைக்கொண்ட கணக்கில் இஷா ராஜேஸ்வரியை பகடிவதை செய்த குற்றத்திற்காக ஷாலினி பெரியசாமிக்கு 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது சுதந்திரமாக உள்ளார்..
மற்றொரு நபரான 44 வயது லோரி ஓட்டுநர் B. சதிஷ்குமார் என்பவர், Dulal Brothers 360 என்ற பெயரைக்கொண்ட கணக்கில் இஷா ராஜேஸ்வரியை பகடிவதை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது சிறையில் 12 மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் இஷா ராஜேஸ்வரி பகடிவதை சம்பவத்தில் விடுவிக்கப்பட்டுள்ள அதே பெண் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி , மற்றொரு பெண்ணை சமூக வலைத்தளத்தில் பகடிவதை செய்த குற்றத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலிபரப்புத்துறை ஊடகவியலாளான 40 வயது எஸ். ஹேமலதா என்பவர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் செய்து கொண்ட புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி அயிடில் போல்ஹசான் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 506 மற்றும் 509 பிரிவின் கீழ் அந்த சந்தேகப்பேர்வழி விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








