கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-
மலேசியாவின் தலைநகரமாக விளங்கும் கோலாலம்பூர் இன்னமும் பாதுகாப்பானதாகவே விளங்குகிறது. சுற்றுப்பயணிகள் தாராளமாக சுற்றிப்பார்க்க வரலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
கோலாலம்பூர் மாநகரின் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் அமைப்பு முறை குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் நில அமிழ்வு சம்பவம் ஏற்பட்ட பகுதிகளில் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலப்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை இலக்காக கொண்டு கோலாலபூர் மாநகர் மன்றம் அவற்றை சீர்ப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக இன்று பினாங்கு, குபாங் செமாங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்கடைக்குள் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப்பிரஜையான விஜயலெட்சுமிக்கு நேர்ந்த கதி தொடர்பில் கோலாலம்பூரின் பாதுகாப்பு குறித்து பிரதமரின் கருத்து கேட்ட போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.








