நேபாளில் ஏற்பட்ட பேரழிவில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்கள், தங்களது DNA மாதிரிகளை வழங்கத் தயாராகி, அதிகாரிகளின் அழைப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
காணாமல் போன மலேசியரான 57 வயது கலைமதி கருப்பையா என்பவரின் கணவர் சிவகுமார் காளிமுத்து, தமது பிள்ளைகள் மரபணு பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகவும், போலீசாரின் அழைப்புக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
“பிள்ளைகள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள். போலீசார் அழைக்கும் நேரத்துக்காக காத்திருக்கிறோம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
நேபாளில் பேரழிவுப் பகுதியில் அடையாளம் காணப்படாத பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மலேசியர்களின் உறவினர்கள் மாநில போலீஸ் தலைமையகங்களில் மரபணு பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு சென்றிருந்த கலைமதி, பேரழிவுக்குப் பின்னர் தொடர்பை இழந்தவர்களில் ஒருவராவார்.
மரபணு பரிசோதனைக்கு குடும்பம் தயாராக இருந்தாலும், தமது மனைவி உயிருடன் மீண்டும் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை என சிவகுமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளில் 55 மலேசியர்களும், சீனாவில் 36 மலேசியர்களும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
நேபாள பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 804 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 3,300 பேர் காணாமல் போயுள்ளனர்.








