பேராக், சுங்கை சிப்புட் அருகே எங்கோர் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பாலத்தில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில், 42 வயதான தனது தந்தையுடன் கைகோர்த்து பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன், பாலத்தில் இருந்த ஓர் இடைவெளியில் தவறி விழுந்ததாக சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் சரண் ஐ வான் தெரிவித்தார்.
சுமார் 5 மீட்டர் உயரத்திலிருந்து பாலத்தின் கீழே இருந்த தார்ச்சாலையில் சிறுவன் விழுந்தான்.
உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கோலா கங்சார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
எனினும், சிகிச்சை பலனின்றி இரவு 7.40 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது.
சிறுவனின் குடும்பத்தினர் ஜோகூர், குளுவாங்கைச் சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறைக்காக கோலா கங்சாருக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக விக்டோரியா பாலம் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








