கோலாலம்பூர், புடு பகுதியில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றின் வெளியே, தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரும் சண்டையாக மாறியதைத் தொடர்ந்து, 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான 38 விநாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சில தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே முதலில் சண்டையைத் தூண்டியதாகவும், பின்னர் அது இரவு விடுதியின் வெளியே பெரும் மோதலாக மாறியதாகவும் வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
19 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முன்னதாக வன்முறை குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை முயற்சி, ஆயுதத்துடன் கலவரம் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றங்கள் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சில சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.








