குவாந்தான், ஜூலை.11-
குவாந்தான் அருகே கிழக்குக் கரை விரைவுச்சாலையில் இன்று அதிகாலை 12 மோட்டார் சைக்கிள்களும் ஒரு காரும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
அதிகாலை 1.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த 13 வயது சிறுவன் கழுத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், காரை செலுத்தியவர் காயங்களின்றி உயிர் தப்பினார்.
முதற்கட்ட விசாரணையில், குவாந்தானிலிருந்து கெமாமான் நோக்கிச் சென்ற கார் வலது பாதையில் சென்று கொண்டிருந்த போது, அதன் பின்புறத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதைத் தொடர்ந்து தொடர் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








