கோலாலம்பூர், ஜூலை.11-
கடல் மார்க்கமாக போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய கும்பல் உள்பட இரண்டு போதைப்பொருள் கும்பல்களை, அண்மையில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் போலீசார் முறியடித்துள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் வெளியிட்டுள்ள தகவலில், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பகாங் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
'Ops Pijat' எனப் பெயரிடப்பட்ட முதல் நடவடிக்கையில், மலேசியாவை இடைநிலை மையமாக பயன்படுத்தி போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ்களை பொதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது.
இந்தச் சோதனையில், போதைப்பொருள் கலந்ததாக சந்தேகிக்கப்படும் 500 வேப் கார்ட்ரிட்ஜ் பொதிகளும், மொத்தம் 197 கிராம் எடையுள்ள எட்டு MDMA திரவப் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 52 ஆயிரத்து 400 என போலீசார் தெரிவித்துள்ளனர்.








