கோலாலம்பூர், நவ. 16-
பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் இப்ராஹிம் சாட் காலமானார். அவருக்கு வயது 78. இன்று காலையில் கேபிஜே டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவ மையத்தில் இப்ராஹிம் சாட் தமது இறுதி மூச்சை விட்டதாக அவரின் மகன் ஸைருல் அயு தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்கு முன்பு மாரடைப்புக்கு ஆளாகிய இப்ராஹிம் சாட் , மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள வீட்டிற்கு திரும்பியதாக மகன் ஸைருல் அயு குறிப்பிட்டார்.
எனினும் தமது தந்தை தொடர்ந்து மூச்சுத் திணறலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கெராக்கான் கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கோ சூ கூன், பினாங்கு மாநில முதலமைச்சராக பதவியேற்றிருந்த போது, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை அம்னோ சார்பில் மாநில துணை முதலமைச்சராக இப்ராஹிம் சாட் பொறுப்பேற்று இருந்தார்.
பினாங்கு மாநில முன்னாள் அம்னோ தலைவரான இப்ராஹிம் சாட் , புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். போக்குவரத்து துணை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அவர், அரசியல் ஓய்வுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான மலேசியத் தூதராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார்.








