கோலாலம்பூர், நவ. 22-
ஸ்பைக் பூட் முரட்டுக் காலணியை அணிந்துக்கொண்டு ஜுனியர் பயற்சியாளரின் வயிற்றிலேயே பலவந்தமாக மிதித்து, காயம் விளைவித்ததாக மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் இராணுவப்பயிற்சி கல்விக் கழகத்தைச் சேர்ந்த கேடட் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முகமட் அடில் மாட் அவாங் கான் Ghan என்ற அந்த கேடட் அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் நூர்லினா ஹனிம் ஹலிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட போது அந்த கேடட் அதிகாரி மிக அமைதியாக காணப்பட்டார்.
கடந்த அக்டேபார் மாதம் 21 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் முகமட் ஹபிக் இக்பால் அகமட் ரஷிடி என்ற ஜுனியர் பயிற்சியாளரிடம் வன்ம முறையில் நடந்துக்கொண்டு, காயம் விளைவித்தாக அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த கேடட் அதிகாரி, விசாரணை கோரியதால் அவரை, 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதித்ததுடன்,பாதிக்கப்பட்டவருக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தார்.








