மதம் மாற்றப்பட்ட தனது குழந்தைகளுக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தவரான தனித்த வாழும் தாயார் எம். இந்திராகாந்திக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்ட மொத்தம் 14 ஆயிரம் வெள்ளி வழக்கு செலவுத் தொகை உத்தரவை, நிறுத்தி வைக்கக்கோரி, அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் தேதி மற்றும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முறையே உயர் நீதிமன்றமும், அப்பீல் நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவையும், நிலைநிறுத்திய தீர்ப்பையும் தள்ளுபடி செய்வதற்கு அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தில் எந்தவொரு தகுதிபாடும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மொஹ்சானுடின் ஷா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதேவேளையில் அந்த தீர்ப்பும், உத்தரவும் தவறு என்று நியாயப்படுத்துவதற்கு எந்தவொரு பிரத்தியேக சூழலும் இருப்பதாக இவ்வழக்கில் கண்டறிய முடியவில்லை என்று நீதிபதி ராஜா அஹ்மாட் முஹ்சானுடின் ஷா குறிப்பிட்டார்.
தவி, ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்திக்கு, வழக்கு செலவுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையும் ராஜா அஹ்மாட் மொஹ்சானுடின் ஷா தமது தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.








