கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், தாமான் ஷாமெலின் பகுதியிலுள்ள கரோக்கே மையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 34 ஆடவர்களுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அபராதம் விதித்துள்ளது.
இதில் 21 முதல் 57 வயதுக்குட்பட்ட 32 பேருக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 4 மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 19 வயதுடைய இரு இளைஞர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, லாரி ஒன்றின் மூலம் கரோக்கே மையத்தின் வாயில் கதவை இடித்துத் தள்ளிய இக்கும்பல், கம்பு மற்றும் கற்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. இது தொடர்பான ஒரு நிமிடக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட 32 பேருக்கும் இது முதல் குற்றம் என்பதால், மாஜிஸ்திரேட் ஃபைசானூர் ஹசன் அபராதத் தொகையை மட்டுமே விதித்தார்.








