மலாக்கா, பிப்ரவரி.13-
மலாக்கா, புக்கிட் செரிண்டிட் பூங்கா கழிப்பறையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையின் தாய் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளம் பெண்ணை மலாக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில், புக்கிட் செரிண்டிட் மாநகரப் பூங்காவில் உள்ள பெண்கள் கழிப்பறையைத் தூய்மைப் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யச் சென்றார். அப்போது அங்கிருந்த கழிப்பறைத் தொட்டியில், தொப்புள் கொடியுடன் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண் மலாக்கா மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் இது குறித்துக் கூறுகையில், "கைது செய்யப்பட்ட பெண் திருமணமாகாதவர். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றார்.








