கோலாலம்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் போதைப்பொருள் மற்றும் 'கே' விருந்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 51 நபர்கள் மீது பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் 17 நபர்களின் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
மேலும் இன்ஸ்டாகிராம் வலைத்தளம் மூலம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சீன நாட்டவரைப் போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் அனைத்தும் சொந்தப் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மே 24ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், 23 உள்ளூர் ஆடவர்கள் மற்றும் 28 வெளிநாட்டு ஆடவர்கள் என 51 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 103,070 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ, எக்ஸ்டசி மற்றும் கெட்டமின் போன்ற போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விருந்தின் போது சுயநினைவின்றி மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த ஒரு நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவமனை அறிக்கையின் முடிவிற்காகப் போலீசார் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.








