அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 13ஆவது மாடியில் இருந்து விழுந்து 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவனது பெற்றோர் உட்பட 8 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் சகாயா அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்தச் சிறுவன் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் கைருல் அனுவார் காலித் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பலியான சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாங் மருத்துவமனையில் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு, 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)-ன்கீழ் வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








