புத்ராஜெயா, ஜூலை.16-
நாட்டில் 3 மாதக் கைக்குழந்தை ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அது தொடர்பான காட்சிப் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அம்பலமாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் பேரணிக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற அமைச்சர் சைஃபுடின், மூன்று மாதக் கைக்குழந்தைக்கு நேர்ந்த வக்கிரச் செயலை அம்பலப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து நள்ளிரவு தமக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றால் அது எத்தகையக் கடுமை வாய்ந்த ஒரு முக்கிய விவகாரம் என்பது பொருள் கொள்ளப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
இந்த வக்கிரச் செயல், பைத்தியக்காரத்தனத்தின் உச்சக் கட்டமாகும். எனவே இது போன்றச் சம்பவங்களைக் கையாளுவதற்கு குற்றப்புலனாய்வுத் துறையின் மகளிர், சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் செயல்கள் பிரிவான D11 ( டீ நைன் ) பலப்படுத்த வேண்டிய அவசியத்தைத் தாம் வலியுறுத்தியுள்ளதாக சைஃபுடின் விளக்கினார்.








