பினாங்கு மாநிலத் தமிழாசிரியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், 'பினாங்கு மாநிலத் தமிழ் இலக்கிய விழா 2026' மற்றும் 'நூல்வனம் 2026' மாபெரும் புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று பினாங்கு. கெலா பாத்தாஸ்-இல் உள்ள மில்லினியம் மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், தமிழக அரசின் மிக உயரிய கலைமாமணி விருது பெற்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியரும், பட்டிமன்ற சொற்பொழிவாளருமான பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தேசிய அளவிலான சிறுகதை எழுதும் போட்டியின் நிறைவு விழாவாக அமையும் இந்நிகழ்வில், வெற்றி பெற்ற படைப்புகள் ‘அகரம்’, ‘அரும்பு’, ‘அமிழ்து’ ஆகிய ஆசிரியர்-மாணவர் சிறுகதை நூல் தொகுப்புகளாக வெளியிடப்படவுள்ளன. மேலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் சங்கமிக்கும் இலவச விற்பனைக்கூடங்களுடன் கூடிய ‘நூல்வனம்’ புத்தகக் கண்காட்சியும், விச்சு மாமாவின் நெறியாள்கையில் உருவாகியுள்ள ‘அர்சுணன் மைந்தன் பப்புருவாகனன்’ என்ற பிரம்மாண்ட தமிழ் இலக்கிய நாடகமும் இவ்விழாவின் பிரதான அங்கங்களாக மேடையேறவுள்ளன.

இவ்விழாவிற்கு வருகை தரும் வாசகர்கள் பாரம்பரிய உடை அல்லது சிவப்பு நிற ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பதால், பொதுமக்கள் www.yayasanguru.com என்ற இணையத்தளம் அல்லது க்யூஆர் குறியீடு வழியாக உடனே தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.









