கிளந்தான் மாநிலம் குவா மூசாங் பகுதியில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதில், 55 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜாலான் லாடாங் செராசா அருகிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் ஆற்றங்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட பாலோ 2 போலீசார், யானைகளின் காலடிச்சுவடுகள் மற்றும் சாணம் இருந்ததைக் கண்டுபிடித்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் பூ தெரிவித்துள்ளார்.
இதனால் காட்டு யானைகள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








