கூலிம், டிச. 27-
ஓர் இந்திய நபரும், அவரின் மகனும் சென்ற மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி, விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகனும் மாண்டனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.07 மணியளவில் கெடா, கூலிம், ஜாலான் கெனாரி, தாமான் கெனாரி சாலையில் நிகழ்ந்தது.
36 வயது வினோத் அரசு மற்றும் அவரின் 8 வயது மகன் நவினேஸ் வினோத் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாக நம்ப்படும் வோல்ஸ்வேகன் கார் ஒன்று, தனது வழித்தடத்திலிருந்து விலகி எதிர்திசையில் நுழைந்ததில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியதாக கூறப்படுகிறது.
இதில் கூலிம் தமிழ்ப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவரான நவினேஸ், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
அவரின் தந்தை வினோத், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி, கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி அஸிஸான் தெரிவித்தார்.
தந்தையையும், மகனையும் மோதித்தள்ளிய வோல்ஸ்வேகன் காரை செலுத்தியவர் 32 வயது பெண் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. அவர் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை.
உயிரிழந்த வினோத், கூலிமில் தொழிற்சாலை ஒன்றில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.








