மலேசிய விமானி ஒருவர் இந்தோனிசியாவிற்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்திய சம்பவமானது மலேசிய போக்குவரத்து துறையை உலுக்கியிருப்பதோடு, அரசாங்கத்திற்கு அடுத்தக் கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், வெளிநாடுகளில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்ச்சியாக மலேசியர்கள் சிக்கி வருவதும் அரசாங்கத்தை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
இதனைடுத்து, மலேசிய விமான நிலையங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்துவதும், மலேசியா ஏர்லைன்ஸ் குழும விமானிகளுக்கான பாதுகாப்பு சோதனை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தா சென்ற மலேசிய விமானி ஒருவரின் பயணப்பையில் 70 ஆயிரத்து 114 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பதையும் கண்டறிந்து, பாதுகாப்பு குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெளிநாடுகளில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் மலேசியர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை தனிநபர் குற்றங்களாகக் கருதாமல், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று மாரா எனப்படும் பாலியல் வன்முறை, தாக்குதல் மற்றும் வழிப்பறித் திருட்டுக்கு எதிரான மலேசியர்கள் என்ற அமைப்பின் தலைவர் டேவ் அவ்ரான் தெரிவித்துள்ளார்.
உலகளவில் போதைப்பொருள் கும்பல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை பயன்படுத்தி மலேசியர்களை போதைப்பொருள் கடத்தலுக்கான "கூரியர்களாக" சிக்கவைத்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் மலேசியாவின் எல்லைகளைச் சுற்றி மிகவும் ஆபத்தான நிலை உருவாகி வருகிறது. இதை சிலர் செய்த தனிப்பட்ட தவறாக மட்டும் பார்க்க முடியாது," என்று இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்








