Jun 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

Share:

கோத்தா கினபாலு, மே.18-

சிலாங்கூர் மாநிலத்தை அடுத்து, நாட்டில் அதிக எச்ஐவி பாதிப்பு பதிவாகும் மாநிலமாக சபா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 400 புதிய எச்ஐவி தொற்று சம்பவங்கள் அங்கு பதிவாகி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மலேசிய எய்ட்ஸ் அறக்கட்டளையான MAF ஏற்பாடு செய்திருந்த ‘Red Ribbon Kota Kinabalu High Tea’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஹனிஃபா ஹஜார் தையிப், எச்ஐவி குறித்து பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தினார்.

அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் 4 லட்சம் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், சபா மாநில சுகாதார அணுகல் திட்டமான Shape மூலம், குறைந்த வருமானம் கொண்டோர் மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழும் எச்ஐவி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை, பராமரிப்பு, போக்குவரத்து உதவி மற்றும் அத்தியாவசியத் தேவைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மலேசிய எய்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் டத்தோ டாக்டர் அடீபா கமாருல்ஸமான் கூறுகையில், ஆரம்பத்திலேயே எச்ஐவி தொற்றைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதே எய்ட்சை ஒழிக்கும் முக்கிய வழி என்று தெரிவித்தார்.

அதே வேளையில், எச்ஐவி தொற்று அபாயம் உள்ளானவர்களுக்கு முன்கூட்டிய தடுப்பு மருந்துகளும் வழங்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் எயிட்சை முற்றிலுமாக ஒழிப்பதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது.

Related News