SME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சலுகைகளையும் நிதியுதவிகளையும் அறிவித்துள்ளது தொழில் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஷாரிகாட் ஜாமினான் பெம்பியாயான் பெர்நியாகான்' என்ற திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கட்டுமானம், விவசாயம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 80 விழுக்காடு வரை நிதிப் பாதுகாப்புடன் கடன் வசதிகளைப் பெற முடியும்.
அத்துடன், மின்-இன்வாய்ஸ் முறைக்கு மாறுவதற்கான காலக்கெடு 2027 டிசம்பர் 31 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மோதல்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடியால் அதிகரித்துள்ள செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைகளையும் பிரதமர் அறிவித்துள்ளார்.








