மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்ரை இன்று புதன்கிழமை மதியம் அவரின் அரண்மனையில் அதிகாரப்பூர்வமாகச் சந்தித்தார்.
மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தீர்வுக்குரிய வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா செயலகத்தின் வழி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்தியர் நலன் சார்ந்த செயல் நடடிவடிக்கைகள் குறித்து சுல்தான் இப்ராஹிம்மிற்கு டத்தோ ரமணன் விளக்கமளித்தார்.
இச்சந்திப்பின் போது வைஎஸ்ஆர் எனப்படும் சுல்தான ரொகாயா அறவாரியத்துக்கும் , மித்ராவுக்கும் இடையிலான ஒரு கூட்டு ஒத்துழைப்புக்கு சுல்தான் இப்ராகிம் இணக்கம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், ஜொகூர் மாநில இந்தியர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மித்ராவும் கைகொடுக்க முனைந்துள்ளது.
இது தொடர்பாக சுல்தான் இப்ராஹிம் மேலும் பேசுகையில், ஜொகூர் அரச அறவாரியங்கள் அனைத்தும் தமது மேற்பார்வையில் உள்ளன என்றும் ஜோகூர் மக்களுக்கு உதவ விரும்புகின்றவர்கள் யாராக இருந்தாலும், இந்த அறவாரியங்களுடன் இணைந்து பங்காற்ற தாம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார. ஜோகூர் சுல்தானின் இந்த அழைப்பானது, அவரின் அதிகாரப்பூர்வ முகநூலிலும் பதிவிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் சுல்தான ரொகாயா அறவாரியத்தின் தலைவர் டத்தோ ஆர்.சுகுமாறனும் கலந்து கொண்டார்.








