கோலாலம்பூர், ஜனவரி.22-
நாட்டின் தொழிலாளர்களிடையே ஆங்கிலமொழிப் புலமையை வலுப்படுத்துவதற்காக, மனித வள அமைச்சு மூன்று உத்திகளைச் செயல்படுத்தி வருகிறது. இதில் அதன் கீழ் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி மற்றும் TVET பயிற்சி பாடத்திட்டங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.
மலாய்மொழியின் தேசிய மொழி அந்தஸ்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கிய மற்றும் முறையான அணுகுமுறையின் மூலம், தொழிலாளர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை படிப்படியாக வலுப்படுத்த மனித வள அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியிலான வேலைச் சூழல், உயர்தொழில்நுட்பம், தானியங்கி முறை மற்றும் செயற்கை நுண்ணறிவான AI ஆகியவற்றால் இயக்கப்படும் இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கும், குறிப்பாகப் புதிய பணியாளர்கள் மற்றும் TVET பட்டதாரிகளின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கும் ஆங்கிலமொழிப் புலமை என்பது ஒரு முக்கியமான அடிப்படைத் தகுதியாகும் என்று அவர் கூறினார்.
"திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பயிற்சி நிலையங்களில், TVET பாடத்திட்டங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்புப் பொருட்களை இரண்டு மொழிகளான மலாய் மற்றும் ஆங்கிலம் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம்."
"அதே போல், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் நிஜமான சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகளும், மாணவர்கள் செய்யும் படைப்புகள் மற்றும் தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்துவதும் இதில் அடங்கும்."
"மனித வளத் துறை கீழ் முழு நேரக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், தங்களது படிப்பு காலம் முழுவதும் ஆங்கிலப் பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாகப் பயில வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் ஆங்கில மொழிப் புலமைக்கு ஆதரவு வழங்கப்படுகிறது," என்று இன்று நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.








