கோலாலம்பூர், ஜனவரி22-
மலேசியாவின் தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் மிகவும் துணிச்சலானவை - விரிவானவை என்று மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி வெகுவாகப் பாராட்டியதாக, மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று மதியம் நாடாளுமன்றத்திலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில், இந்திய தூதருடன் நடைபெற்ற ஒரு பரஸ்பர சந்திப்பிற்குப் பிறகு, அமைச்சர் இத்தகவலை தமது முகநூலில் பதிவிட்டார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், தொழிலாளர்களை மேம்படுத்துவதோடு தொழிற்சங்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக இந்தியத் தூதர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ‘கிக்’ பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிச் செய்வதில் மலேசியா காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், மலேசியா மற்றும் இந்தியா இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள நல்லுறவை, புதிய துறைகளிலும் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப விரிவுபடுத்த இரு தரப்பும் விருப்பம் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பு மலேசியா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே புதிய வாய்ப்புகளை உருவாக்கி, பரஸ்பர நன்மைகளைத் தரும் என்று தாம் நம்புவதாக டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.








