மியன்மாரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு இன்னமும் அச்சுறுத்தல்களோ அல்லது அவர்களின் உயிருக்கு ஆபத்தோ நீடித்தால், அவர்கள் மலேசியாவிலிருந்து வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று அரசாங்க ஊடகத் தொடர்பாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மியன்மார் அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்திருந்தார். இது குறித்துப் பேசிய ஃபாஹ்மி ஃபாட்ஸில், அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மியன்மார் விதித்துள்ள தகுதி நெறிமுறைகளை வெளியுறவு மற்றும் உள்நாட்டமைச்சகங்கள் விரிவாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
இன்று புதன்கிழமை வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபாஹ்மி ஃபாட்ஸில் இதனைத் தெரிவித்தார்.








