தும்பாட், ஏப்ரல்.26-
கிளாந்தான், வாகாஃப் பாரு பகுதியில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவர் ஒருவர், சுமார் 5.5 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்தார். இன்று காலை தேர்வுக்காகக் காத்திருந்த போது கிணற்றின் மெல்லிய சிமெண்ட் மூடியின் மீது அமர்ந்ததால் அஃது உடைந்து மாணவர் உள்ளே விழுந்துள்ளார் என வாகாஃப் பாரு தீயணைப்பு, மீட்புப் படையின் செயல்பாட்டு கமாண்டர் அஸ்மி சுலைமான் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், சுமார் 40 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ராஜா பெரெம்புவான் ஸைனாப் II மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.








