கிள்ளான் அருகே தாமான் எங் ஆன் பகுதியில் நேற்று மாலை இ-ஹெய்லிங் காரில் பயனித்துக் கொண்டிருந்த 25 வயது பெண் ஒருவர், தன்னை ஓட்டுநர் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தவுடன் ஓடும் காரிலிருந்து குதித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் மற்றொரு பயணியுடன் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், அப்போது, ஓட்டுநர் பின்பார்வை கண்ணாடி வழியாக தன்னை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அவர் அச்சமடைந்ததாக கிள்ளான் வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் கதவைத் திறந்து வெளியே குதித்தவுடன், அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அவருக்கு உதவி செய்துள்ளார்.
மேலும், அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் விஜய ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 47 வயதான அந்த ஓட்டுநர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உயிருக்கோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில், கவனக்குறைவாகவோ அல்லது பொறுப்பற்ற முறையிலோ செயல்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டம் பிரிவு 336-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








