சுங்கை பூலோ, மே.24-
சுங்கை பூலோவில் உள்ள என்கேவிஈ நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை ஆற்றில் விழுந்து காணாமல் போன 11 வயது சிறுவன் பௌலுஸ் அம்சால் ஜிம்ரி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை மாலை தகவலறிந்த மீட்புப் படையினர் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்; இருளாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் இரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.
ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து தேடிய மீட்புக் குழுவினருக்கு, சிறுவன் விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் பாரு சுங்கை பூலோ பகுதியில் காலை 10 மணியளவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுங்கை பூலோ, ஷா ஆலாம் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த நீர் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியின் முடிவில் இந்தச் சோகமான முடிவு எட்டப்பட்டது.








