பஹாங் மாநிலம் பெந்தோங்கில் கடந்த திங்கட்கிழமை நடந்த மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூன்று நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜாலான் மெம்பாகா-செர்திக் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா மைவி மற்றும் ஹோண்டா எச்ஆர்-வி வாகனங்கள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், தப்பியோடிய மூன்று சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுகளில் உள்ளவர்கள் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் Pahang மாநில இடைக்கால போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் அவர்கள் வாகனத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர்களுக்கு வாகனத்தை வாடகைக்கு வழங்கிய 30 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் வரை அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்துள்ளார்.








