ஷா ஆலாம், பிப்ரவரி.27-
மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுடிஎம் மாணவர் ஷாம்சுல் ஹரிஸ் ஷாம்சுடின் மரணத்திற்குக் காரணமான மூன்று பயிற்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மாற்றப்பட்டது குறித்து அவரது தாயார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரான 46 வயது Ummu Haiman Bee Daulatgun, இந்த வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டதற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருப்பினும், ஆரம்பத்தில் கொலை குற்றச்சாட்டு குற்றவியல் சட்டமான 302- ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது நோக்கமில்லா கொலையாக குற்றவியல் சட்டம் 304- ஆவது பிரிவின் கீழ் மாற்றப்பட்டது ஏன் என்று Ummu Haiman கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2025 டிசம்பர் 2 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகம் இந்த வழக்கை 302 பிரிவின் கீழ் 'கொலை வழக்கு' என வகைப்படுத்தியிருந்தது. ஆனால் "திடீரென இன்று ஏன் இதனை 304-ஆவது பிரிவுக்கு மாற்றப்பட்டது? இதற்கான காரணத்தை குடும்பத்தினர் அறிய விரும்புகிறோம்" என்று Ummu Haiman வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவத்தில் இன்னும் அதிகமானோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தாங்கள் நம்புவதாகவும், ஆனால் மூன்று பேர் மீது மட்டுமே ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.








